கனடாவில் பாதுகாத்து இயங்கி வந்த வல்வை ஆவணக்காப்பகம் வல்வெட்டித்துறையில் கைளிக்கும் வைபவம் இம்மாத முற்பகுதியில் வல்வெட்டித்துறை அ.மி.த.க. பாடசாலையில் இடம்பெற்றது.
கௌரவ விருந்தினராக பேராசிரியர். பரமு. புஷ்பரட்ணம் (தலைவர் வரலாற்றுத்துறை, யாழ் பல்கலைக்கழகம்), யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வல்வை நகரசபைத் தலைவர் ந.அனந்தராஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் புஷ்பரட்ணம் பேராசிரியர் ஆவண காப்பகத்தை திறந்து வைத்தார். அங்கு இடம்பெற்ற கண்காட்சியில் ஆவணக்காப்பகம் மீள்பதிப்புச் செய்த 23 நூல்களும், ஆண்டு ரீதியாக வெளிவந்த வல்வை வரலாற்று நூல்களும், கனடாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அன்ன பூரணிக்கப்பலின் மாதிரி உருவம், பாரம்பரிய பொருட்களான சாடி, மரவை, பல்லாங்குழி, கபிலரின் குறிஞ்சிப்பாட்டு 99 தமிழ்ப்பூக்கள், தாயகத்தின் கோயில் இலக்கிய வரலாறு ஆகியவற்றின் வர்ணப்படங்களுடன் கூடிய தொகுப்பும், இன்னும் பல வரலாற்று சான்றுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சி நகரசபைத் தலைவர் ந.அனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உரையாற்றுகையில் எனது நீண்டகால நண்பன் நகுலசிகாமணி அவர்கள்; பாரம்பரியமான வரலாறுகளைப்
பாதுகாத்து வருபவர். அத்துடன் எமது பழமைவாய்ந்த வரலாற்று நூல்களை அவரின் பாரியாரின் துணையுடன் மீள்பதிப்புச் செய்து வருபவர். 1997ல் வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள் என்ற நூலுக்கு அணிந்துரை தருமாறு என்னையும் தலைவர் சிவசிதம்பரம் அவர்களையும் கேட்டு எம்மையும் கௌரவித்திருந்தார். 2002ல் நான் கனடா சென்றபோது அவர் வீட்டில் அவரது இரு பிள்ளைகளுடன் ஒன்றாக உணவருந்தினேன். பின்னர் அவர்களின் அகால மரணப்பிரிவு என் மனதை மிகவும் தாக்கியது. இன்று அவர்களின் புகைப்படம் காட்சிப்படுத்தியது கவலையை அளிக்கிறது. அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகின்றேன். எமது வரலாறுகள் திரிக்கப்பட்டும் எமது மண் அபகரிக்கப்பட்டும் சூறையாடப்பட்டுக் கொண்டும் இருக்கும் நிலையில் இந்தப்பணி எதிர்கால சமுதாயத்திற்கு தேவையானதாகும். அவருடைய அர்ப்பணிப்பும் பெருமைமிக்க உழைப்பும், இவற்றையெல்லாம் எவ்வளவு சிரமப்பட்டு இந்தப்பயணத்தில் கொண்டு வந்திருப்பார் என்பது எனக்குத் தெரியும். இவற்றை நாமெல்லாம் ஒன்று சேர்ந்து பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும். என்றார்.
நகரசபைத் தலைவர் அனந்தராஜ் தனது தலைமை உரையில் இவற்றை கனடாவிலிருந்து சேகரித்துக் கொண்டு வந்த எனது மைத்துனர் நகுலசிகாமணியும் அவரது மனைவியும் தமது கனவை நிறைவேற்ற ஒரு வரலாற்று ஆவணக்காப்பகத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளனர். இது காலப்போக்கில் வல்வையின் ஆவணக்காப்பகமாக அல்லாது தமிழரின் பாரம் பரியத்தை வெளிக்காட்டும் கலையகமாக, வரலாற்று நூல்நிலையமாக வளர்ந்து வரவேண்டுமென வாழ்த்தினார்.
யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் புஷ்ப்பரட்ணம் அவர்கள் தனது உரையில் நான் ஒரு வரலாற்றுத்துறை ஆசிரியர் என்ற வகையில் எமது வரலாறுகளையும் மரபுரிமைச் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கனவிற்கு இன்றைய நிகழ்வு ஒரு தொடக்கப்புள்ளி யாகும். இந்நாள் ஒரு உயர்வான பொன்நாள் என்றும் பார்க்கிறேன். சமகாலச் சூழலில் எமது உறவுகள் கடல் கடந்து வாழ்ந்தாலும் எமது மண்ணை நேசித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இன்றைய நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாகும். இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை ஒரு உயர்ந்த பணியாகப் பார்க்கிறேன். இவர்கள் வயதில் முதியவர்களாக இல்லாவிடினும் 20 நூல்களுக்கு மேல் மீள்பதிப்புச் செய்ததோடு அல்லாமல் பல நூற்றாண்டு வரலாறுகளையும் காட்சிப்படுத்தி, எமது இளைய சமுதாயத்திற்கு ஒப்படைத்துள்ளமை மிகப் பெரிய பணியாகும். இந்தக் காப்பகம் மென்மேலும் வளர நாம் யாவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
தொகுப்பு வல்வை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜெ.அமுதீஸ்வரன்

Related posts: